Thursday, December 25, 2025

புருஷன் வேண்டாம், கள்ளக்காதலன் தான் வேண்டும்..அடம்பிடித்த இளம்பெண்..!

சேலம் மாவட்டம், ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாலையில் ஒரு காதல் ஜோடி ஒன்று வந்தது. 24 வயது இளம்பெண்ணும், 25 வயது வாலிபரும் என இந்த இளம் ஜோடி தாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம், எங்களை குடும்பத்தினர் பிரிக்க பார்க்கிறார்கள் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அந்த இளம்பெண்ணின் பெற்றோரும், மற்றொரு தரப்பினரும் அங்கு வந்தனர். அந்த மற்றொரு தரப்பில் வந்த 30 வயது வாலிபர், போலீசாரிடம் அந்த பெண்ணுக்கு நான் தான் முறைப்படி தாலி கட்டிய முதல் கணவர் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், போலீசார், முதல் கணவரிடமும், அந்த இளம்பெண்ணிடமும் தீவிரமாக விசாரித்தனர்.

அந்த விசாரணையில், ஓமலூர் அருகே கொங்குபட்டி பகுதியை சேர்ந்த அந்த 30 வயது வாலிபர், சின்ன திருப்பதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இவருக்கும், போலீசில் தஞ்சம் அடைந்த அந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கணவரின் கடைக்கு செல்லாமல் அதே பகுதியில் உள்ள மற்றொரு துணிக்கடைக்கு அந்த இளம்பெண் வேலைக்கு சென்று வந்துள்ளார். அவ்வாறு சென்று வரும் போது, சிமெண்டு விற்பனை கடையில் வேலை செய்து வந்த 25 வயது வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த இளம்பெண், தனது கள்ளக்காதலனான வாலிபருடன் கடந்த வாரம் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி ஊட்டிக்கு ஓட்டம் பிடித்துள்ளனர்.

அங்கு அவர்கள் ஒரு கோவிலில் தாலி கட்டிக்கொண்டு தற்போது போலீசில் தஞ்சம் அடைந்தது தெரியவந்தது. . பின்னர் முறைப்படி தாலி கட்டிய முதல் கணவருடன் போகுமாறு போலீசார் அறிவுறுத்தினார், ஆனால், அந்த இளம்பெண்ணோ கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்று அடம்பிடித்தாள். அதற்கு சட்டத்தில் இடமில்லை முறைப்படி கணவரை விவாகரத்து செய்யாமல் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள முடியாது, ஒன்று கணவருடன் செல்லுங்கள் அல்லது உங்கள் பெற்றோருடன் செல்லுங்கள் என்று அந்த இளம்பெண்ணிடம் போலீசார் எச்சரித்தனர்.

பின்னர் வேண்டா வெறுப்பாக அந்த இளம்பெண் தனது பெற்றோருடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சினிமா பட பாணியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related News

Latest News