சில நேரங்களில், உங்கள் கார் எந்த சுங்கச்சாவடியையும் கடக்காமல் வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் போதிலும், உங்கள் பாஸ்டேக் வாலட்டில் பணம் குறைவாக இருக்கலாம். இதற்கு காரணம் என்னவென்றால் சுங்கச்சாவடிகளில் தானியங்கி பாஸ்டேக் செயல்படாத போது, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வாகன எண்ணை உள்ளீடு செய்வார்கள். அப்போது தவறுதலாக உங்கள் வாகன எண்ணை உள்ளீடு செய்தால், பணம் தவறுதலாக எடுக்கப்படும்.
இவ்வாறு தவறுதலாக பாஸ்டேக் வாலெட்டில் இருந்து பணம் எடுக்கப்படுவதை தடுப்பதற்காக மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சுங்கச்சாவடியை பயன்படுத்தாமலேயே பாஸ்டேக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டால் மக்கள் உடனே புகார் அளிக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை அமைச்சகம் கூறியுள்ளது. பாஸ்டேக் கணக்கிலிருந்து தவறுதலாக பணம் எடுக்கப்பட்டிருந்தால் 1033 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது falsededuction@ihmcl.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனே மின்னஞ்சல் அனுப்பலாம்.
இது தொடர்பாக விசாரித்து தவறுதலாக பணம் எடுக்கப்பட்டது உண்மை என்றால் உடனடியாக அந்த கணக்கிற்கு பணம் திரும்பி அனுப்பப்படும். மேலும் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடியை நடத்தும் நபர்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.