தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது இலங்கை நோக்கி நகர்ந்து வருகிறது. இது சென்னைக்கு தெற்கு–தென்கிழக்கில் சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகரும் இந்த அமைப்பு, இன்று மாலை வடக்கு இலங்கையில் திரிகோணமலை – யாழ்ப்பாணம் இடைப்பட்ட பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில், தெற்கு கேரள கடலோர பகுதிகளிலும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த வானிலை அமைப்புகளின் காரணமாக, இன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்றும் வீச வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மிக கனமழை வாய்ப்பு உள்ளதால், இந்த பகுதிகளுக்கு ‘ஆரஞ்ச் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
