KYC, வட்டி விகித வழிகாட்டுதல்கள் மற்றும் அவுட்சோர்சிங் விதிமுறைகள் தொடர்பான பல முக்கியமான விதிகளைப் பின்பற்றத் தவறியதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) HDFC வங்கிக்கு ரூ.91 லட்சம் பண அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டின் மார்ச் 31 நிலவரப்படி வங்கியின் நிதி நிலைமையை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கியின் மேற்பார்வை மதிப்பீட்டுக்கான சட்டரீதியான ஆய்வு மூலம் இந்த விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஹெச்டிஎஃப்சி வங்கி ஒரே வகையான கடன்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை பயன்படுத்தியதும் ஒரு முக்கிய குற்றமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. .
இந்த விதிமீறல்கள் பொதுவெளியில் வந்ததால், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகள் அல்லது வங்கிச் சேவைகள் பாதிக்கப்படுமா என்று கவலைப்பட்டனர். ஆனால், வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால் இந்த அபராதத்தால் அவர்களின் கணக்குகளிலோ அல்லது அன்றாடப் பரிவர்த்தனைகளிலோ எந்த மாற்றமும் ஏற்படாது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது
ஹெச்டிஎஃப்சி வங்கி வழக்கம் போல் செயல்படும். கிளை செயல்பாடுகள் முதல் ஆன்லைன் வங்கிச் சேவை வரை அனைத்து சேவைகளும் தடையின்றி கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி இவ்வாறு கடுமையான நடவடிக்கை எடுப்பது வழக்கமான ஒன்றுதான். இதுபோன்ற ஒரு நடவடிக்கை இந்த ஆண்டில் ஏற்கனவே நடந்துள்ளது. அப்போது, இதேபோன்ற KYC விதிமீறல்களுக்காக ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு 75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வாடிக்கையாளர் சேவையில் பெரிய குறைபாடுகள் கொண்ட வங்கிகள் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
