இந்தியாவில் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும், குறிப்பாக ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு, ஜூலை முதல் சில முக்கியமான மாற்றங்கள் வரவிருக்கின்றன. இதனால் ஆன்லைன் கேமிங், வாலட் லோடிங், காப்பீடு மற்றும் பல பரிவர்த்தனைகளில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன.
முதலில் ஆன்லைன் கேமிங் தளங்களில் மாதம் 10,000 ரூபாய்க்கும் மேல் செலவிடும் வாடிக்கையாளர்கள் 1% கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கட்டணம் மாதம் முழுவதும் ஆன கேமிங் செலவுகளுக்கு பொருந்தும், ஆனால் இதற்கான வரம்பு ரூ.4,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செலவுகளில் வெகுமதி புள்ளிகள் கிடைக்காது என்று வங்கி தெரிவித்துள்ளது.
அதேபோல், பேடிஎம், mobikwik போன்ற மூன்றாம் தரப்பு வாலட்களில் மாதம் 10,000 ரூபாய் மேலான லோடிங்குக்கும் 1% கட்டணம் விதிக்கப்படும். இதற்கும் ரூ.4,999 வரம்பு இருக்கும்.
மேலும், ஒவ்வொரு மாதமும் நுகர்வோர் கார்டுகள் மூலம் ரூ.50,000, வணிக அட்டைகள் மூலம் ரூ.75,000 மேல் செலவிட்டால் பயன்பாட்டு கட்டணமாக 1% கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான வரம்பும் ரூ.4,999 ஆக இருக்கும். அதே சமயம் காப்பீடு செலவுகளுக்கு இது பொருந்தாது.
எரிபொருள், கல்விக் கட்டணங்கள் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கும் 1% கட்டணம் தொடரும், ஆனால் ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்ச கட்டணம் ரூ.4,999 தான். எரிபொருளுக்கு ரூ.15,000 அல்லது கல்விக்கான பணம் ரூ.30,000 மேல் செலுத்தப்பட்டால் மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும். மேலும், கல்விக் கட்டணத்தில் இந்த கட்டணம், மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் மட்டும் பொருந்தும். பள்ளி மற்றும் கல்லூரிக்கு நேரடி கட்டணங்களில் இதற்கான கட்டணம் இல்லை என வங்கி அறிவித்துள்ளது.
காப்பீடு பரிவர்த்தனைகளுக்கு வெகுமதி புள்ளிகளுக்கு மாதந்தோறும் வரம்பு வரையப்படுகிறது. இன்ஃபினியா மற்றும் இன்ஃபினியா மெட்டல் கார்டுகளில் 10,000 புள்ளிகள், டைனர்ஸ் பிளாக் மற்றும் பிஸ் பிளாக் மெட்டல் கார்டுகளில் 5,000 புள்ளிகள், மற்ற கார்டுகளில் 2,000 புள்ளிகள் வரம்பு உள்ளது. மேரியட் கிரெடிட் கார்டுக்கு இந்த வரம்புகள் கிடையாது. அனைத்து கட்டணங்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.