இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதன் மூலம், பிப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை மொத்தமாக 100 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த முடிவு, வீடு மற்றும் சிறு வணிகக் கடன்கள் வாங்க விரும்பும் மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாற்றத்தின் பின்னணியில், பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற வங்கிகள் தங்களது ரெப்போ இணைப்பு கடன் வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் குறைத்துள்ளன. இதனால், பேங்க் ஆஃப் பரோடாவின் RLLR( Repo Linked Lending Rate) தற்போது 8.15 சதவீதமாகவும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் RLLR 8.35 சதவீதமாகவும் உள்ளது. இதற்கு முன், இரு வங்கிகளும் முறையே 8.65% மற்றும் 8.85% விகிதத்தில் இருந்தன.
இதே நேரத்தில், யு.சி.ஓ வங்கி 10 புள்ளிகள் MCLR(Marginal Cost of Funds based Lending Rate) விகிதத்தை குறைத்து, தற்போது அதை 8.15 முதல் 9.00 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. ஆனால் பஞ்சாப் நேஷனல் வங்கி MCLR விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை.
இந்த வட்டி விகித குறைப்புகள், வீடு வாங்கும் மக்கள் மற்றும் சிறு தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுக்கு மிகுந்த நன்மையை வழங்கும். ஏனெனில் வட்டி குறையும்போது, அவர்கள் செலுத்த வேண்டிய மாத இஎம்ஐ தொகையும் குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த வட்டி குறைப்பு ஜூன் மாதத்தில் அமலாகினாலும், ஜூலை மாத இஎம்ஐயில் தான் அதன் தாக்கம் பார்வையில் வரும். ஆனால், இந்த மாற்றம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக தெரிவிக்கப்படவில்லை. வங்கி சார்பில் EMI தொகையை குறைப்பது அல்லது கடன் செலுத்தும் காலத்தை குறைப்பது என்ற இரண்டிலும், கடனாளியின் விருப்பத்தை கேட்டே முடிவு எடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
சில வங்கிகள், HDFC போன்றவை, வாடிக்கையாளர்களிடம் அவர்களின் விருப்பத்தை கேட்டு, உரிய மாற்றத்தை மேற்கொள்கின்றன. ஆனால் பல வங்கிகள் இதை பின்பற்றவில்லை. உங்கள் வங்கியும் இதையே செய்திருந்தால், நீங்கள் உங்கள் கிளையில் சென்று ஒரு எழுத்துப் பூர்வமான விண்ணப்பம் அளித்து, உங்களுக்கு விருப்பமான மாற்றத்தை கேட்கலாம் – அதாவது இஎம்ஐ குறைக்கலாமா, அல்லது கடன் காலத்தையா என்பதைக் தேர்வு செய்யலாம்.