பத்திரப்பதிவு சட்டத்துக்கு மாற்றாக, மத்திய அரசு புதிய வரைவு மசோதாவை உருவாக்கி உள்ளது. மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளத்துறை தயாரித்துள்ள இந்த மசோதாவில், இனி பத்திரப்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது பத்திரப்பதிவு செய்பவர்களின் அடையாளத்தை சரிபார்க்க ஆதார் எண் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் இந்த புதிய வரைவு மசோதா அமலுக்கு வந்தால், ஆதார் எண் தேவையில்லை. அதற்கு பதிலாக மாற்று வழிமுறைகள் மூலம் அவர்களின் அடையாளங்களை சரிபார்க்கலாம்.
அதாவது ஆதார் எண் இல்லாதவர்கள் மற்றும் பயன்படுத்த விரும்பாதவர்கள் ஆகியோர் மாற்று வழிமுறைகளை பயன்படுத்தி கொள்ளலாம். ஆதார் எண் இல்லை என்பதற்காக யாருக்கும் பத்திரப்பதிவு மறுக்கக்கூடாது என்பது தான், இந்த புதிய வரைவு மசோதாவின் நோக்கமாகும்.
தற்போதைய சட்டப்படி, ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால், புதிய வரைவு மசோதா, நேரிலோ ஆன்லைன் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என்று கூறுகிறது. என்றாலும் மோசடிகளை தவிர்ப்பதற்காக ஆன்லைன் மூலம் ஆவணங்கள் அளித்தவர்கள், பத்திரத்தை பெறுவதற்கு முன்பு, சார்பதிவாளர் முன்பு நேரில் ஆஜராக வேண்டும்.
தற்போதைய சட்டப்படி, பத்திரத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விரல் ரேகை ஆகியவை வைக்கப்பட வேண்டும். ஆனால், புதிய மசோதாவில், கையெழுத்து மற்றும் வண்ண புகைப்படம் அளிக்கலாம், அல்லது, டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கப்படலாம்.
விரல் ரேகையை சாதாரணமாகவோ, பயோமெட்ரிக் கருவி மூலமாகவோ அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய வரைவு மசோதாவில் ஆதார் எண் கட்டாயமில்லை என்றாலும், ‘பான்’ எண் கண்டிப்பாக அளிக்க வேண்டும் என்று, தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.