நம்ம ஊரு டீக்கடைல இருந்து, பெரிய பெரிய மால்கள் வரைக்கும், நாம எல்லோருமே பயன்படுத்தும் UPI, இப்போ உலக அரங்கில் ஒரு புதிய, வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தைத் தொட்டிருக்கு. ஆமாங்க, நம்ம இந்தியாவோட UPI, இப்போ ஐரோப்பாவின் பேமெண்ட் சிஸ்டத்தோட இணையப் போகுது! இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் Unified Payments Interface, அதாவது UPI-ஐ, ஐரோப்பிய யூனியனின் TARGET Instant Payment Settlement (TIPS) என்ற உடனடிப் பணப் பரிமாற்ற அமைப்புடன் இணைக்க, ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இது, வெறும் ஒரு தொழில்நுட்ப இணைப்பு இல்லை. இது, இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்குக் கிடைத்த ஒரு உலகளாவிய அங்கீகாரம்.
சரி, இந்த இணைப்பால் நமக்கு என்ன பயன்? இதுல ரெண்டு பெரிய நன்மைகள் இருக்கு. முதலாவது, வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள், இனிமேல் ரொம்ப சுலபமாக, வேகமாகக் குறைந்த செலவில் இந்தியாவுக்குப் பணம் அனுப்ப முடியும். அதேபோல, இங்கிருந்து ஐரோப்பாவில் படிக்கும் அல்லது வசிக்கும் நமது உறவினர்களுக்குப் பணம் அனுப்புவதும் ரொம்ப ஈஸியாகிடும். இந்த UPI-TIPS இணைப்பு, இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே நடக்கும் பணப் பரிமாற்றத்தை, இன்னும் வேகமாகவும், வெளிப்படையாகவும், மலிவாகவும் மாற்றப் போகிறது.
இந்த முயற்சியை, இந்திய ரிசர்வ் வங்கியும், NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட்டும் (NIPL), ஐரோப்பிய மத்திய வங்கியுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. உலக அளவில், நாடுகளுக்கு இடையேயான பணப் பரிமாற்றத்தை எளிதாக்க வேண்டும் என்ற G20 நாடுகளின் இலக்குக்கு ஏற்ப, இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இந்தியா, தனது UPI தொழில்நுட்பத்தை, மற்ற நாடுகளின் வேகமான பணப் பரிமாற்ற அமைப்புகளுடன் இணைப்பதில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில், தென் அமெரிக்க நாடான பெரு (Peru), UPI தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட முதல் தென் அமெரிக்க நாடாக மாறியது. இப்போது, ஐரோப்பாவும் இந்த வரிசையில் இணைந்திருப்பது, இந்தியாவின் UPI தொழில்நுட்பத்தின் வெற்றிக்கு ஒரு சான்று.
இந்த UPI-TIPS இணைப்பைச் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, இடர் மேலாண்மை போன்ற பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. விரைவில், ஐரோப்பாவிலும் நமது UPI அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது.
