இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்கள் சமையலுக்கு எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்துகின்றன. உஜ்வாலா உள்ளிட்ட திட்டங்கள் மூலம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு எல்பிஜி இணைப்புகள் சென்றடைந்துள்ளன. எனினும், அண்மைய ஈரான் போர் காரணமாக எல்பிஜி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு, சிலிண்டர் முன்பதிவில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.
இதற்கு மாற்றாக, குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயுவை வழங்கும் பிஎன்ஜி பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. தற்போது இந்தியாவில் சுமார் 1.74 கோடி வீட்டு பிஎன்ஜி இணைப்புகள் உள்ளன. செப்டம்பர் 1, 2026 முதல் புதிய ஊக்கத்தொகைத் திட்டம் அமலுக்கு வருகிறது.
இதன்படி, இலக்கைத் தாண்டி வழங்கப்படும் ஒவ்வொரு புதிய பில் செய்யப்பட்ட பிஎன்ஜி இணைப்புக்கும் தகுதியான சிஜிடி நிறுவனங்களுக்கு கூடுதலாக 200 எஸ்சிஎம் குறைந்த விலை உள்நாட்டு எரிவாயு வழங்கப்படும். இதன் மூலம் நிறுவனங்களின் செலவு குறைந்து, புதிய இணைப்புகளை விரிவுபடுத்த ஊக்கம் கிடைக்கும்.
பிஎன்ஜியில் சிலிண்டர் முன்பதிவு, சேமிப்பு, மாற்றுதல் போன்ற சிரமங்கள் இல்லை. குழாய் மூலம் தொடர்ச்சியான விநியோகம் கிடைப்பதுடன், மீட்டர் அளவீட்டின் அடிப்படையில் மட்டுமே கட்டணம் செலுத்தலாம். மேலும், மாசுபாடு குறைவாக இருப்பதால் இது சுற்றுச்சூழலுக்கும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
