வங்கக்கடலில் அக்டோபர் 24ம் தேதியான இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுக்குறைந்து, தெற்கு கர்நாடகாவின் உள்பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. அதேசமயம், அரபிக்கடலில் உருவாகியிருந்த தாழ்வு மண்டலம் வடமேற்குத் திசையில் மத்திய கிழக்கு அரபிக்கடல் நோக்கி நகர்ந்து வருகிறது.
மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது நாளை வடமேற்குத் திசையில் நகர்ந்து வலுவடையக்கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று நீலகிரி, ஈரோடு, கோவை மலைப்பகுதிகள், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், 26ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
