ஈரான் – இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள தொடர் மோதலால், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் வரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக, நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் விநியோகத்தில் கடும் சிக்கல் நிலவுகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணத்தின்போது, மணமகன் வீட்டார் கேட்கும் வரதட்சணை பட்டியலில் சமையல் கியாஸ் சிலிண்டரும் இடம்பெற்றுள்ளது. இதனால், மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, “வரதட்சணையாக சமையல் கியாஸ் சிலிண்டர் கேட்டு துன்புறுத்தினால், அந்தக் குடும்பத்தின் கியாஸ் இணைப்பு துண்டிக்கப்படும்” என ராஜஸ்தான் அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, அம்மாநில அரசு அதிகாரிகள் கூறும்போது, “கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அபாயத்தால், வர தட்சணையாக சமையல் கியாஸ் சிலிண்டர்களை கேட்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வரதட்சணையாக சிலிண்டர் கேட்டு மணமகளை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த குடும்பத்தின் கியாஸ் இணைப்பும் துண்டிக்கப்படும் என கூறினார்.
