Wednesday, May 14, 2025

இனிமேல் நேரா ATM-க்கு போயி PF எடுக்கலாம்! எப்போ இருந்து தெரியுமா?

மே அல்லது ஜூன் 2025க்குள் EPFO 3.0 திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது எளிமையான, அதிநவீன தொழில்நுட்ப மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. EPFOயின் சேவைகள் இப்போது மேலும் விரைவாகவும், பயனுள்ளவையாகவும் மாற்றப்பட்டுள்ளன.

இப்போது நாம் பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டுமென்றால் நிறைய கட்டாயமான ஆவணங்கள், ஆன்லைன் செயலிகள், காத்திருப்பு காலம், மிகவும் சிரமமான நடைமுறைகள் என பல விஷயங்களை கடக்க வேண்டிய நிலைதான். ஆனால் இனிமேல் அவை எல்லாம் மாற இருக்கின்றன. புதிய திட்டத்தின் மூலம் நேரடியாக ஏடிஎம் வழியாக PF பணத்தை எளிதாக எடுக்கலாம். அதற்கென தனியான கார்டுகள் வழங்கப்படும். அந்த கார்டுகள் உங்கள் ஆதார் மற்றும் மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டிருக்கும். Debit card போல் ATM-ல் போட்டு, எந்த வங்கிக் கணக்கில் வேண்டுமானாலும் நீங்கள் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.

இதுவரை பிஎஃப் பணத்தை எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது. ஆவண சோதனை, வாரங்கள் நீளும் காத்திருப்பு, அனுமதி போன்றவை இருந்தது. ஆனால் தற்போது, அரசு கூறுவதப்படி, 60 சதவீதமான பிஎஃப் முன்பணம் (advance) தானாகவே கணினி வழியாக (auto-mode) 3 நாட்களில் உங்கள் கணக்கில் வரவழைக்கப்படும். இதற்காக அதிகாரிகள் நேரில் சோதனை செய்யவேண்டிய தேவை இல்லை. இதற்காக மருத்துவம், வீடு வாங்குதல், திருமணம், கல்வி செலவுகள் போன்ற தேவைகளுக்காக முன்பணம் எடுப்பது மிகவும் எளிமையாகி விட்டது. முன்பு 1 லட்சம் ரூபாய் வரை எடுக்க முடியாது என்ற கட்டுப்பாடுகள் இருந்தது. இப்போது அந்த எல்லைகளும் தளர்த்தப்பட்டுள்ளது.

அதேவேளை, பிஎஃப் பங்களிப்பு சதவீதம் குறித்து ஒரு முக்கிய மாற்றமும் செய்யப்பட இருக்கிறது. தற்போது ஊழியர்கள் 12% பங்களிப்பு செலுத்துகிறார்கள். ஆனால் புதிய திட்டத்தில், அந்த வரம்பை நீக்கி, தனி நபரின் விருப்பத்திற்கு ஏற்ப – அதாவது எத்தனை சதவீதம் வேண்டுமானாலும் PF-க்கு செலுத்தலாம் – என மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இது சேமிப்பு பழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். தற்போது 1800 ரூபாய் செலுத்துபவர், விருப்பமிருந்தால் அதிகமாக செலுத்தலாம்.

இந்த மாற்றங்கள் பல லட்சம் EPFO சந்தாதாரர்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. சிக்கலான முறைகள் எல்லாம் மாறி, நேரடியாக மற்றும் பாதுகாப்பாக பிஎஃப் பணத்தை இனிமேல் எளிதாக பெற முடியும்.

Latest news