மக்களை அதிகம் பாதித்து வந்த ATM பிரச்சினையை சரிசெய்யும்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
சமீபகாலமாக ATMகளில் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கின்றன. 100, 200 ரூபாய் நோட்டுகளை எடுக்க முடிவதில்லை. இதனால் தங்களது வங்கிக் கணக்கில், 500 ரூபாய்க்கு குறைவாக இருக்கும் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு தொடர்ச்சியாக புகார்கள் பறந்தன. இந்தநிலையில் ரிசர்வ் வங்கி இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும், புதிய உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. அதில், ” அனைத்து வங்கிகள் மற்றும் ATM ஆபரேட்டர்கள், தங்களது ATMகள் வழியாக ரூபாய் 100 மற்றும் ரூபாய் 200 மதிப்புள்ள நோட்டுகளை வைத்து இருக்க வேண்டும்.
அதாவது வருகிற செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள், அனைத்து ATMகளிலும் 75 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூபாய் 100 அல்லது ரூபாய் 200 மதிப்புள்ள நோட்டுகளை, கட்டாயம் விநியோகிக்க வேண்டும்.
2026ம் ஆண்டு மார்ச் 31க்குள் அனைத்து ATMகளிலும் 90 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூபாய் 100 அல்லது ரூபாய் 200 மதிப்புள்ள நோட்டுகளை விநியோகிக்க வேண்டும், ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ATMகளில் 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளை வைக்கும் வகையில், நான்கு கேசெட்டுகள் உள்ளன.
இதில் 2000 ரூபாய் நோட்டு தற்போது புழக்கத்தில் இல்லை. இது வங்கிகளுக்கு வசதியாக போய் விட்டது. மொத்தமாக 4 கேசெட்டுகளிலும் 500 ரூபாய் நோட்டுகளை நிரப்பி விடுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரிசர்வ் வங்கி இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.