ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் ஆருண் பாஷா(வயது 22). இவர் நீட் தேர்வுக்காக சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் தங்கி படித்து வந்தார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஆருண் பாஷா, தனது காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
திடீெரன அவர், தனது கை மணிக்கட்டு பகுதியில் அறுத்துக்கொண்டு, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஆருண்பாஷா, ஏற்கனவே கோவையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் படித்த போது, அங்கு இளம்பெண் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் 2 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு முதல் அதிகாலை வரை ஆருண் பாஷாவுடன் அவரது காதலி செல்போனில் பேசி சண்டையிட்டதாகவும், இதனால் விரக்தி அடைந்த அவர், கையை அறுத்துக்கொண்டு, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
