Wednesday, June 18, 2025

உச்சகட்ட போர் பதற்றம்! ரஷ்யாவுக்கு 6000 பேரை அனுப்பும் வடகொரியா! என்ன காரணம்?

இப்போது உலக நாடுகள் யுத்தத்தில் வெறும் ஆயுதங்களால் அல்ல, மனிதர்களால் கூட போராடத் தயாராகின்றன. அந்த வகையில், வடகொரியாவும் ரஷ்யாவும் ஒன்றாக கூடி ஒரு பெரிய திட்டத்தை செயலில் கொண்டு வந்துள்ளன. ஊடக தகவல்களின்படி, வடகொரியா சுமார் 6,000 பேர் கொண்ட இராணுவ தொழிலாளிகளை ரஷ்யாவிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இதில் 5,000 பேர் கட்டுமான பணிக்காகவும், 1,000 பேர் சப்பராகவும், அதாவது சுரங்கங்கள் மற்றும் வெடிபொருள் களங்களில் பணியாற்றும் நிபுணர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் செல்லும் இடம் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியம். இது உக்ரைனுடன் அருகாமையில் உள்ள பகுதி. அங்கே நடக்கும் ரஷ்யாவின் போர் முயற்சிக்கு நேரடி உதவியாகவே இந்த வடகொரிய தொழிலாளர்கள் அனுப்பப்படுகிறார்கள். இது ஒரு சாதாரண வேலை மாற்றம் அல்ல. இது ஒரு நாட்டின் போருக்கு இன்னொரு நாடு மனித ஆதாரங்களை நேரடியாக அனுப்பும் பெரும் நடவடிக்கையாகும்.

இந்த நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்கு, கடந்த இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக வடகொரிய தலைநகர் பியோங்யாங்கிற்குச் சென்றார். அவர் நேரடியாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே ஜூன் 4 ஆம் தேதி நடந்த முதல் சந்திப்பிலும் இருவரும் பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு குறித்து தீவிரமாக பேசியிருந்தனர். தற்போது அவர் மீண்டும் சென்றிருப்பது அந்த முதல் ஒப்பந்தத்தின் தொடர்ச்சியே என்பதையும் ரஷ்ய ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

இந்த இரண்டு நாடுகளும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கள் இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை வேகமாக வளர்த்துள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதம், கிம் ஜாங் உனும், ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினும், பரஸ்பர பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். அந்த ஒப்பந்தத்தின் நினைவாக வரவிருக்கும் ஜூன் 19ஆம் தேதி, கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கே ஒரு உச்சிமாநாட்டுக்காக பயணிக்கப்போகிறார் என்ற ஊகங்களும் கிளம்பி உள்ளன. ஆனால் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதேநேரத்தில், ரஷ்ய பாதுகாப்பு செயலாளர் ஷோய்குவின் வடகொரியா பயணங்கள் தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மூன்று மாதங்களில் மூன்று முறை அவர் பியோங்யாங்கிற்குச் சென்று உள்ளார் என்பது, ரஷ்யா – வடகொரியா கூட்டணியின் தீவிரத்தையும், அதற்குள் நடக்கும் ரகசிய ஒத்துழைப்புகளையும் வெளிக்கொணர்கின்றது.

இப்போது, ரஷ்யா உக்ரைனில் நடத்திய போர் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. ஆயுதங்கள் மட்டுமல்ல, மனித உழைப்பையும் கொண்டு போரில் வெல்ல முயல்கிறது. வடகொரியா அளிக்கும் இந்த வேலைச்செய்யும் இராணுவ ஆதரவு, யுத்தத்தின் நிலையை மாற்றும் சக்தியாக மாறும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த எல்லாம் நடந்துக் கொண்டிருக்கும் வேளையில், உலகம் ஒரு புதிய கட்டத்தில் நுழைகிறது. இப்போது போர் என்பது ஒரு நாட்டுக்குள் மட்டும் அல்ல, பல நாடுகளின் ஒத்துழைப்போடு நடத்தப்படும் திட்டமாக மாறி வருகிறது. இது உலக அமைதிக்கு எச்சரிக்கையா? அல்லது ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் சாதகமான ஒரு புதிய சகாப்தம் துவங்குகிறதா? இதற்கான பதில் இன்னும் வெளியில் வரவில்லை. ஆனால் ஒரே விஷயம் மட்டும் உறுதி — போர்க்களம் மட்டுமல்ல, இராஜதந்திரமே இப்போது வெடிக்கத் தயாராக இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news