‘டிரம்ப் ஒரு மனநோயாளி! பதவியை விட்டு தூக்குங்க’ ! முன்னாள் CIA தலைவர் ‘குரல்’!

அமெரிக்க அரசியலில் தற்போது ஒரு பெரும் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. முன்னாள் சிஐஏ (CIA) தலைவரான ஜான் பிரெனன், தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது ஒரு பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ட்ரம்ப் ஒரு ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ போல செயல்படுவதாகவும், அவரைப் பதவியிலிருந்து நீக்க அரசியலமைப்பின் 25-வது திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அதிரடியாகக் கூறியுள்ளார். ஒபாமா ஆட்சிக்காலத்தில் சிஐஏ தலைவராக இருந்த பிரெனனின் இந்த கருத்து, அமெரிக்காவில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

ஈரான் விவகாரத்தில் ட்ரம்ப் பேசி வரும் கருத்துகளே இந்த மோதலுக்கு முக்கியக் காரணம். ஈரானின் ஒட்டுமொத்த நாகரிகத்தையும் அழித்துவிடுவேன் என்று ட்ரம்ப் சமீபத்தில் எச்சரித்திருந்தது, அணு ஆயுதப் பயன்பாட்டை மறைமுகமாகக் குறிப்பதாகப் பிரெனன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அணுகுமுறை அமெரிக்காவின் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள அதிபருக்கு அழகல்ல என்றும், இது ஒட்டுமொத்த உலகிற்கும் ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்துள்ளார். 1967-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த 25-வது திருத்தச் சட்டம், ஒரு அதிபர் தனது கடமைகளைச் செய்யத் தகுதியற்றவராக இருக்கும்போது அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்காகவே உருவாக்கப்பட்டது என்பது பிரெனனின் வாதம்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பிரெனனின் இந்த கருத்தை ஆதரித்தாலும், நடைமுறையில் இது நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஏனெனில், தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அமைச்சரவையில் உள்ள அனைவரும் ட்ரம்பிற்கு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றனர். தங்களை எதிர்க்கும் அதிகாரிகளுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், பிரெனனும் தற்போது ஒரு விசாரணை வளையத்திற்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், அமெரிக்காவிற்குள் ட்ரம்பிற்கு எதிரான இந்த குரல்கள் புதிய அரசியல் நெருக்கடியைக் கிளப்பியுள்ளன. இது வெறும் அரசியல் விமர்சனம் தானா அல்லது அமெரிக்க ஜனநாயகத்தில் ஏற்படப்போகும் ஒரு பெரிய மாற்றத்தின் அறிகுறியா என்பது காலம்தான் பதில் சொல்ல வேண்டும். உலகையே உற்றுநோக்க வைத்துள்ள இந்த விவகாரத்தில், அடுத்தகட்டமாக என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News