தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பொதுமக்களும் மின்சார வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்க நீண்ட நாள்களாக எழுந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்க உள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்தார். சென்னையில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
சார்ஜிங் நிலையங்கள் அமைய உள்ள இடங்கள்
பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோயில் பார்க்கிங், பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங், அம்பத்தூர் மங்கல் ஏரி பார்க்கிங், தியாகராய நகர் மாநகராட்சி மைதானம், சோமசுந்தரம் மைதானம், செம்மொழி பூங்கா (ஆயிரம் விளக்கு), மெரீனா கடற்கரை, போகன் வில்லா பூங்கா, அண்ணா நகர், நகேஸ்வரா ராவ் பூங்கா, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.