மின்கம்பம் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம் : மின்வாரிய அதிகாரி கைது

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்பிரபு (36) என்பவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தைக்கு கோவை மாவட்டம் நீலம்பூர் ஊராட்சி, முதலிப்பாளையத்தில் நிலம் உள்ளது. அந்நிலத்தின் நடுவே குறைந்த மின் அழுத்த (LT) மின் பாதையில் ஒரு மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த மின்கம்பத்தை நிலத்தின் ஓரமாக மாற்றுவதற்காக குறும்பப்பாளையம் மின் வாரிய அலுவலகத்தில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார்.

மின்கம்பத்தை மாற்றுவதற்கான செலவு ரூ.50,000/- ஐத் தாண்டுவதால், அதற்கு செயற்பொறியாளரின் அனுமதி பெற வேண்டியதாக இருந்தது. எனவே அவர்கள் சோமனூர் மின் வாரிய செயற்பொறியாளர் சபரிராஜனை நேரில் சந்தித்துள்ளனர்.

அப்பொழுது மின் கம்பம் மற்றும் பணிக்கு அனுமதி வழங்க ரூ.20,000/- லஞ்சமாக கேட்டிருக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செந்தில் பிரபு, இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இடம் புகார் கொடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோமனூர் மின் வாரிய அலுவலகத்தில், ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாகப் பெற்ற, சபரி ராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, அவரிடம் இருந்த 20000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Related News

Latest News