சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பல் துலக்கும் பழக்கத்தைத்தான் அனைவரும் பின்பற்றுவோம். இது வாய் மற்றும் பற்களின் சுகாதாரத்தை பராமரிப்பதற்கு அவசியமானது.
ஆனால் பல் துலக்குவதில் காட்டும் ஆர்வத்தில் பாதியை கூட பலர் பிரஷ் விஷயத்தில் காட்டுவதில்லை. அதாவது நிறைய பேர் பிரஷை மாதக்கணக்கில் பயன்படுத்துவார்கள். இன்னும் தெளிவாக சொன்னால் அதில் இருக்கும் இழைகள் தேய்ந்து போகும் வரை உபயோகிப்பவர்களும் இருக்கிறார்கள்.
இது பல் மருத்துவர்களின் கருத்துப்படி, மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பிரஷை கண்டிப்பாக மாற்றியாக வேண்டும். பிரஷை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் அதிலிருக்கும் இழைகள் அதன் வடிவத்தை இழந்துவிடும். தேய்ந்தோ, உடைந்தோ போய்விடும். அதனை பயன்படுத்தினால் பற்களுக்கு இடையே இருக்கும் உணவுத்துகள்களை அகற்றும் செயல்திறன் குறைந்து போகும்.
மேலும்,ஈறுகளுக்கும் சேதம் ஏற்படுத்தும். ஏனென்றால் பிரெஷில் இருக்கும் இழைகள் நேராக, தொய்வடையாமல் இருந்தால்தான் பற்களுக்கு இடையேயும், ஈறு பகுதிகளிலும் சிறப்பாக செயல்படுவதாக கூறுகின்றனர். பழைய இழைகள் ஈறுகளை பாதுகாப்பதற்கு பதிலாக எரிச்சலடைய செய்யும். அத்துடன் பழைய இழைகளில் பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் பூஞ்சை காளான்கள் படிந்திருக்கக்கூடும்.இதனால், வாய்வழி சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
பற்களில் கிருமிகள் பெருக காரணமாகி ஈறுகளை சிதைக்கக்கூடும். பிரஷ் இழைகள் தேய்ந்தாலோ, சேதம் அடைந்தாலோ 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியதில்லை. உடனே மாற்றிவிடுவதுதான் பற்களுக்கு பாதுகாப்பானது என்று தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக குழந்தைகள் அதிக அழுத்தம் கொடுத்து பல் துலக்குவார்கள் என்பதால் அவர்களின் பிரஷ் இழைகள் வேகமாக தேய்ந்துவிடும். மேலும், பிரஷ்களை மூடிய நிலையில் வைக்கக்கூடாது. ஏனென்றால், ஈரப்பதம் பாக்டீரியா, வைரஸ் படிவதற்கு வழிவகுக்கும்.ஆதலால் காற்றோட்ட சூழல்தான் சிறந்தது.