வங்கிகளில் பலர் தங்களின் நகை, ஆவணங்கள், பணம் போன்ற மதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பாக வைக்க லாக்கர் வசதி பயன்படுத்துகின்றனர். ஆனால், சமீப ஆண்டுகளில் லாக்கர் உடைப்பு, தீ விபத்து அல்லது கொள்ளை போன்ற சம்பவங்கள் ஏற்படும்போது, வாடிக்கையாளர்கள் இழப்பீடு பெற முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு தீர்வாக 2022 முதல் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை அமல்படுத்தியது. அதன் படி, வங்கியின் தவறாலோ, அலட்சியத்தாலோ, லாக்கரில் உள்ள பொருட்கள் சேதமடைந்தாலோ அல்லது திருட்டு போனாலோ, வங்கிகள் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆனால், வங்கி திருப்பித் தர வேண்டிய தொகைக்கு ஒரு வரம்பு உள்ளது. RBI விதிமுறைப்படி, ஒரு லாக்கருக்கு அதிகபட்சம் 100 மடங்கு ஆண்டுக் கட்டணம் அதாவது annual rent மட்டுமே இழப்பீடாக வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு லாக்கரின் வருட வாடகை 5,000 ரூபாய் என்றால், வாடிக்கையாளருக்கு கிடைக்கும் அதிகபட்ச இழப்பீடு 5 லட்சம் ரூபாய் ஆகும்.
அதிகமாக பணம், நகை வைத்திருந்தாலும், அதன் முழுமையான மதிப்பை வங்கி திருப்பித் தராது. எனவே, வாடிக்கையாளர்கள் மதிப்புள்ள பொருட்களை வங்கியில் வைக்கும் முன், அவற்றை தனிப்பட்ட காப்பீடு செய்து வைத்திருப்பது பாதுகாப்பானதாக நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வங்கிகளின் இந்த நடைமுறையால் லாக்கரில் உள்ள பணம் அல்லது பொருட்கள் தொலைந்தால், வாடிக்கையாளருக்கு ஒரு வரையறுக்கப்பட்ட அளவிலேயே இழப்பீடு கிடைக்கும் என்பது சட்டரீதியாகத் தெளிவாகியுள்ளது.