நாமக்கல் மாவட்டம் காமராஜர் நகரில் ரவிக்குமார் என்பவர் பேட்டரி கடை நடத்தி வருகின்றார். இவரது மனைவி சாலா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதேப் பகுதியில் நாமக்கல் திமுக எம்.எல்.ஏ ராமலிங்கத்தின் உறவினரான அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில், அருண்குமார் மற்றும் அவரது இரண்டு மகன்களும் வழித்தட பாதையில் இருந்த புற்களை அகற்றி, ரவிக்குமார் வீட்டிற்கு முன கொட்டியதாக தெரிகிறது. இதனை ரவிக்குமார் தட்டிக்கேட்ட நிலையில், இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ரவிக்குமாரை அருண்குமார் மற்றும் அவரது மகன்கள் இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த ரவிக்குமார் இவரது மனைவி சாலா ஆகிய இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேப்போல் ரவிக்குமார் தரப்பினர் தாக்கியதாக கூறி அருண்குமாரின் இரு மகன்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் இருத்தரபினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.