நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ஆதரவாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்ற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம், நம் ஜனநாயகத்தின் மீதும், நம் படைப்புச் சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
