டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்! NIA உறுதி செய்த அதிர்ச்சி தகவல்!

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ள நிலையில், இந்த தாக்குதலில் முக்கிய பங்கை வகித்ததாக சந்தேகிக்கப்படும் நபரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கை, வழக்கில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற இந்த வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்தனர். காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி, காரை ஓட்டிச் சென்று தற்கொலைப்படை தாக்குதலை மேற்கொண்டதாக விசாரணையில் தெளிவானது. முதலில் டெல்லி போலீஸார் இந்த வழக்கை ஆய்வு செய்தனர். பின்னர், மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில், இது என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது. விசாரணைக்காக 10 பேர் கொண்ட சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில், காஷ்மீர் பாம்பூர் அருகே உள்ள சம்பூரா பகுதியைச் சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்ற நபர், டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரை இவரே தன் பெயரில் வாங்கியதாகவும், அதை வாங்குவதற்காக அவர் டெல்லி வந்திருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உமர் முகமது நபியுடன் இணைந்து இந்த தாக்குதலுக்கான திட்டத்தில் ஈடுபட்டதாக என்ஐஏ கூறியுள்ளது. உமர் முகமது நபி, ஃபரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்தில் பொதுமருத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றியதைவும் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

விசாரணைக்காக உமர் முகமது நபிக்குச் சொந்தமான மற்றொரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உள்பட 73 பேரிடம் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரப் பிரதேச போலீஸார் மற்றும் பல்வேறு அரசு ஏஜென்சிகளுடன் ஒருங்கிணைந்து இந்த பெரிய சதிக்கு பின்னால் உள்ள நெட்வொர்க்கை கண்டறிய என்ஐஏ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Related News

Latest News