டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் நீட்டித்து வருகின்றது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் நான்காம் நாள் அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமையும், புதிய தொழிலாளர்கள் சட்டத்துக்கு எதிராக புதன்கிழமையும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
