பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பாதியில் நிறுத்தம்! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு பேச்சு!

இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசிக்க பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நடுப்பகுதியில் நிறுத்தி அதை வைத்தார். காரணம், அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு தொலைபேசியில் அழைத்தது தான்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கொண்டு வந்த 20 அம்சங்களைக் கொண்ட காசா அமைதி திட்டம் குறித்து எகிப்தில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதன் படி, உயிருடன் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். உயிரிழந்த கைதிகளின் உடல்களும் மீள ஒப்படைக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் குறித்த ஆலோசனைக்காக நெதன்யாகு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோதே பிரதமர் மோடியின் அழைப்பு வந்தது.

பிரதமர் மோடி தனது X பக்கத்தில், ‘எனது நண்பர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினேன். அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்த காசா அமைதி திட்டத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்துக்கு வாழ்த்து தெரிவித்தேன். காசா மக்களுக்கு உதவிகளை அதிகரிக்கும் ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்கிறது.’ என பதிவிட்டார்.

இதேபோல், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டதற்காக பிரதமர் நெதன்யாகுவிற்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, இஸ்ரேல் அரசு காசா அமைதி ஒப்பந்தத்துக்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்ததோடு, உடனடியாக சண்டை நிறுத்தம் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் படைகள் விரைவில் காசாவிலிருந்து வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News