ஒரு நாள் முழுவதும் நம்முடைய உடலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பது காலை உணவுதான். ஆனால், பலரும் வேலைக்குச் செல்வதால் நேரமில்லை என்று சொல்லிக்கொண்டு காலை உணவைத் தவிர்த்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் 10 மணி, 11 மணி ஆகிய நேரங்களில் தான் சாப்பிடுகிறார்கள். உண்மையில், இதுவும் ஒரு தவறான பழக்கமே.
இந்த தவறை வீட்டில் இருக்கும் பெண்கள் தான் அதிகம் செய்கிறார்கள். கணவரையும் குழந்தைகளையும் அனுப்பிவிட்டு, பிறகு தான் நிதானமாக சாப்பிடுகிறார்கள். இது, காலை உணவைத் தவிர்ப்பதைவிட கூட மோசமானது என சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.
உடல் சக்தி குறையும்
காலை உணவை தாமதமாக சாப்பிடுவதால் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை சீராக உடல் பயன்படுத்த முடியாது. பசியின் கட்டுப்பாடுகள் மாறும். உடல் மெட்டபாலிசம் சீரழியும்.
யாரெல்லாம் அதிகமாக இந்த தவறை செய்கிறார்கள்?
தூக்கமின்மை கொண்டவர்கள், மனச்சோர்வு, பதட்டம், உடல் சோர்வு உள்ளவர்கள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், இரவில்நீண்ட நேரம் கண் விழித்துக் கொண்டு இருப்பவர்கள் இவர்கள் தான் பெரும்பாலும் காலை உணவை தவிர்க்கிறார்கள் அல்லது தாமதமாக சாப்பிடுகிறார்கள்.
தீர்வு என்ன?
காலை எழுந்த 1 மணி நேரத்துக்குள் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.சீக்கிரமாக சாப்பிடும்போது, உடல் தேவையான ஊட்டச்சத்துக்களை பெறும், மெட்டபாலிசம் இயங்கும், ஆற்றல் அதிகரிக்கும், வாழ்நாள் நீடிக்கும்.