வடகிழக்கு பருவமழை காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடற்கரையில் 3 அடி உயரத்துக்கு திடீர் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால், பரபரப்பு நிலவியது.
மாமல்லபுரம் முதல் புதிய கல்பாக்கம் கடற்கரை பகுதி வரை மீனவ குப்பங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, மீன்பிடி தொழில் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இப்பகுதி, மீனவர்கள் தினமும் அதிகாலை கடலுக்கு சென்று மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. சுமார், 4 அடி உயரத்துக்கு கடல் அலை எழும்பி கரையை நோக்கி வேகமாக வந்து செல்கின்றது. இதனால் கரை பகுதியை தாண்டி பல மீட்டர் தூரத்துக்கு கடல் முன்னோக்கி வந்துள்ளது.
மேலும், கடல் சீற்றம் காரணமாக 3 அடி உயரத்துக்கு திடீர் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால், மீனவர்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து, தங்களது மீன்பிடி படகு மற்றும் வலைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். இதனால், கடற்கரை பகுதியில் பரபரப்பு நிலவியது.
