உக்ரைன்-ரஷ்யா போர் நாளுக்கு நாள் தீவிரமாகி கொண்டே போகிறது. இதில் ட்ரோன் தாக்குதல்கள் முக்கிய ஆயுதமாக வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா – உக்ரைனின் ட்ரோன்களை குறிவைத்து அழிக்க – சீனாவில் தயாரிக்கப்பட்ட புதிய லேசர் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் பெயர் – “Silent Hunter”. இது ஒரு 30 கிலோவாட் திறன் கொண்ட ஃபைபர் ஆப்டிக் லேசர். சாதாரணமாக எஸ்யூவி வாகனத்தில் பொருத்தக்கூடிய அளவிற்கு இந்த ஆயுதம் சிறியதாக இருக்கிறது. ஆனால் தாக்கத்தில் – இது மிகப் பெரிய ஒன்றாக மாறுகிறது.
இந்த லேசர் வான் அமைப்பில் ரேடார் மற்றும் ஆப்டிகல் கண்காணிப்பு சிஸ்டம் ஆகியவை உள்ளன.இதன் ரேடார் 5 கிலோமீட்டர் தூரத்திலிருந்து இலக்குகளை கண்டறியும்; ஆப்டிகல் அமைப்புகள் 3 கிலோமீட்டர் வரை இலக்குகளை கண்காணிக்கும். இந்த லேசர், 1.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ட்ரோன்களை நேராக அழிக்கவும், 3 கிலோமீட்டரிலிருந்து அவற்றின் கேமரா, சென்சார்கள் போன்றவற்றை செயலிழக்கச் செய்யவும் முடியும்.
ரஷ்யா வெளியிட்ட வீடியோவில், ஷ்செட்ரிக் UAV, ஸ்கைவாக்கர் X8, டிஸ்ட்ராக்டர் போன்ற உக்ரைனின் ட்ரோன்கள் இந்த லேசர் தாக்குதலில் வீழ்த்தப்பட்டதை பார்க்கலாம்.
இந்த வீடியோ வெளியாகிய சில மணி நேரத்திலேயே, ரஷ்யாவில் உள்ள பல விமான தளங்கள் மீது உக்ரைன் முன்னெடுத்த ட்ரோன் தாக்குதலில், 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் Tu-95 மற்றும் Tu-22 போர் விமானங்களும் அடங்கும். இது, ரஷ்யாவிற்கு மிகப்பெரிய இழப்பாகும்.
இந்த நிலையில், சீனாவில் தயாரிக்கப்பட்ட “Silent Hunter” லேசர் வான் பாதுகாப்பு அமைப்பை ரஷ்யா அக்டோபர் 2024 முதல் பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. மேலும் ஈரான், சவுதி அரேபியா போன்ற நாடுகளும் இதைப் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது என்னவனென்றால் – ரஷ்யாவுக்கு சீனாவின் இந்த உதவி. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியபடி, ரஷ்யா பயன்படுத்தும் ட்ரோன்கள் மற்றும் லேசர் பாதுகாப்பு அமைப்புகளில் 80% மின்னணு சாதனங்கள் சீனாவில் இருந்து வந்தவை எனும் தகவலும் இதன் பின் உள்ளது.
இந்த சைலண்ட் ஹண்டர் லேசர் வான் – ஒரு புதிய தளத்தில் போரை நகர்த்தி கொண்டு வருகிறது. இது ட்ரோன் போர் முறைமைக்கு எதிரான எதிர்கால நவீன பதிலாக உருவெடுத்து வருகிறது.