திருவேற்காடு அயனம்பாக்கம் பொன்னியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிம் அன்சாரி (35). இவர் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், ரியாஸ்(5), ரிஸ்வான்(3) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் அன்சாரி வேலைக்கு சென்ற நிலையில் அவரது மனைவி வசந்தியும் வீட்டு வேலைக்காக வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த இரண்டு சிறுவர்களும் வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்த போது வீட்டின் எதிரே இருந்த குளத்தின் அருகே சென்று விளையாடியதாக கூறப்படுகின்றது.
அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் விழுந்து தத்தளித்து வந்துள்ளனர். இதனை குளத்தின் மறுபகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நவீன் என்ற சிறுவன் ஓடி வந்து இரண்டு சிறுவர்களையும் மீட்டதாக கூறப்படுகிறது.
சுயநினைவு இழுந்த இரண்டு சிறுவர்களையும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் இது குறித்து திருவேற்காடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
