Monday, December 22, 2025

சிபிஐ விசாரணை மூலம் தவெகவுக்கு நெருக்கடி கொடுக்க பாஜக திட்டம்?

கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தை சிபிஐ விசாரணை மூலம் அரசியல் ரீதியாக நெருக்கடிக்குள் கொண்டு வர பாஜக முயற்சி செய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, ‘தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பெரும்பாலும் எளிய வருவாயுடையவர்கள். அவர்களை நேரில் சந்தித்தபோது அவர்கள் மனநிலையைப் பார்த்து மிகவும் வேதனையாக இருந்தது. அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே என் ஒரே நோக்கம்,’ என்றார்.

‘உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி விசாரணைக்கு எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் இப்போது உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதனை கண்காணிக்க முன்னாள் நீதிபதி சஞ்சய் ரஸ்தோகி தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் ஆகியவை பாஜக ஆட்சியில் அரசியல் கருவியாகவே பயன்படுத்தப்படுகின்றன என்பதால், மக்களிடம் நம்பிக்கை குறைவுள்ளது,’ என்றும் அவர் கூறினார்.

‘அந்த கண்காணிப்பு குழுவில் தமிழக கேடரிலிருந்து இருந்தாலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது. அதில் அஸ்ரா கார்க் இடம்பெற்றால் விசாரணை நேர்மையாக நடைபெறும் என நான் நம்புகிறேன்,’ என்றார்.

மேலும், ‘உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு காலக்கெடு நிர்ணயிக்காதது கவலைக்குரியது. இதை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். பாஜக இந்த வழக்கை த.வெ.க-க்கு எதிரான அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது,’ என்று ஜோதிமணி கூறியுள்ளார்.

Related News

Latest News