பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்க, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ரகசிய நடவடிக்கையை தொடங்கியது. கடந்த 7ம் தேதி அதிகாலையில், 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதன் அடுத்த நாள், 10ம் தேதி அதிகாலையில், பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளங்கள், விமான தளங்கள் உள்ளிட்ட 11 முக்கிய இடங்கள் இந்திய தாக்குதலால் முடங்கின. இந்த அதிரடி நடவடிக்கையால் பதறிய பாகிஸ்தான், இந்தியாவிடம் மண்டியிட்டு, மோதலை நிறுத்துமாறு கெஞ்சியது. அதையடுத்து இந்தியா தாக்குதலை நிறுத்தியது.
இந்த சந்தர்ப்பத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது துருக்கி மற்றும் அஜர்பைஜான். இந்தியா நடத்திய தாக்குதலை இருநாடுகளும் கண்டித்தன. துருக்கி, ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் ஆபரேட்டர்களை வழங்கியது. இதனால், இந்தியர்கள் துருக்கி மற்றும் அஜர்பைஜான் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இப்போதெல்லாம் இந்த நாடுகளுக்கான சுற்றுலா திட்டங்களை இந்தியர்கள் ரத்துசெய்துள்ளனர். வர்த்தகத்திலும் புறக்கணிப்பு தொடங்கியுள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், துருக்கி, ஈரான், தஜிகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் போன்ற நாடுகளுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். சமீபத்தில், அஜர்பைஜானின் லாச்சின் நகரில், பாகிஸ்தான், துருக்கி மற்றும் அஜர்பைஜான் முத்தரப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் வர்த்தக துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், பாகிஸ்தானில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்தார். பொருளாதாரம், எரிசக்தி, விவசாயம், பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளும் கூட்டு ராணுவ பயிற்சி மற்றும் ஆயுத பயிற்சிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.
இதைவிட முக்கியமானது என்னவென்றால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு, இந்த முதலீடு ஒரு துடுப்பாக அமைந்துள்ளது. இது பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார துறைகளில் ஒரு புதிய ஆற்றலை உருவாக்கும் என நம்பப்படுகிறது.