மத்திய கிழக்கில் மீண்டும் பெரும் போர் பதற்றம் உருவாகி வருகிறது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்ட கால பகை தற்போது திறந்த போராக மாறும் நிலைக்கு வந்துவிட்டது. சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் திடீரென ஈரானில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலாக ஈரான் டெல்அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தியது.
இந்த தொடர்ச்சியான தாக்குதலால் இருநாடுகளும் நேரடியாக மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரி மொஹ்சின் ரெசாயி கூறியுள்ள கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதில், இஸ்ரேல் ஈரானை அணுஆயுதத்தால் தாக்கினால், அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இஸ்ரேலை அணுஆயுதத்தால் தாக்கும் என உறுதி கூறப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் இஸ்ரேலை அணுஆயுதத்தால் தாக்க இயலுமா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது.
இது சாத்தியம் தான். ஏனென்றால், பாகிஸ்தானிடம் அணுஆயுதங்களும், அதனை சுமந்து செல்லும் திறனுடைய ஏவுகணைகளும் உள்ளன. குறிப்பாக, ஷாகின் 3 என்ற ஏவுகணை 2,700 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறனைக் கொண்டது. பாகிஸ்தானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சுமார் 3,000 கிலோமீட்டர் தூரம் இருந்தாலும், இந்த ஏவுகணையை ஈரானில் இருந்து வைத்து தாக்கினால் நேரடியாக இஸ்ரேலை அடைய முடியும்.
அதேசமயம், பாகிஸ்தான் இப்படி செயல்படுமா என்பது இன்னும் தெளிவல்ல. ஏனென்றால், அணுஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் மற்றொரு நாட்டுக்காக அதனை பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களை மீறுவதாகும்.
எனவே, பாகிஸ்தானிடம் அதற்கான வாய்ப்பு இருந்தாலும், ஈரானுக்காக அது பயன்படுத்தப்படுமா என்பதற்கான பதில், இஸ்ரேல்-ஈரான் மோதல் எவ்வாறு மாறுகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.