பெங்களூருல இருக்கீங்களா? உஷாரா இருங்க..₹5,000 அபராதம்!

இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு மாநகரம், தற்போது வரலாறு காணாத ஒரு மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததாலும், எல் நினோ தாக்கத்தின் விளைவாலும் கர்நாடகாவின் முக்கிய அணைகளில் நீர் இருப்பு அபாயகரமான அளவிற்குக் குறைந்துள்ளது.

இதனால், 1.40 கோடி மக்கள் வசிக்கும் பெங்களூரு மாநகரத்திற்குத் தடையின்றி குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தற்போது அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

குடிநீரை அத்தியாவசியமற்ற தேவைகளுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வாகனங்களைக் கழுவுதல், வீட்டுத் தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல், சாலைகள் மற்றும் நடைபாதைகளைச் சுத்தம் செய்தல் மற்றும் கட்டுமானப் பணிகள் போன்ற தேவைகளுக்குக் குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், நீச்சல் குளங்களை நிரப்புவதற்குக் குடிநீரைப் பயன்படுத்தினால், உடனடியாக 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். முதல் முறை அபராதம் கட்டிய பிறகும் விதிமுறையை மீறுபவர்களுக்குத் தினசரி 500 ரூபாய் கூடுதல் அபராதமாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 40 சதவீத மழைப் பற்றாக்குறை நிலவியுள்ளது. 1901-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மிக வறண்ட ஜூன் மாதங்களின் பட்டியலில் இந்த ஆண்டு 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வறட்சியான சூழலை உணர்ந்து, மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் யாராவது தண்ணீரை வீணாக்குவதைப் பார்த்தால், அது குறித்து புகார் அளிக்க 1916 என்ற பிரத்யேக உதவி மைய எண்ணையும் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தடை உத்தரவு மாநில மற்றும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நீச்சல் குளங்களுக்குப் பொருந்தாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கோடை காலம் முடிந்து பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்த்த வேளையில், மழை ஏமாற்றிவிட்டதால் பெங்களூரு வாசிகள் இப்போது பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்தச் சூழலைச் சமாளிக்க அரசு எடுக்கும் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எந்த அளவிற்குப் பலன் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News