அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு ரூபாய் 9.28 இலட்சம் கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டி போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அவ்வப்போது போக்குவரத்து கட்டண உயர்வு என வதந்தி பரவுவது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் வதந்தியை நாங்கள் மறுத்து வருகிறோம். அரசு பேருந்து கழகங்களை பொறுத்தளவு, பேருந்து கட்டண உயர்வு குறித்து எந்தவித திட்டமும் தமிழ்நாடு அரசிடம் தற்போதைக்கு இல்லை.
இப்பொழுதும் அதையே உறுதிப்படுத்துகிறோம். சாதாரண ஏழை, எளிய மக்களிடம் கட்டணச் சுமையை உயர்த்தக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். பேருந்து கட்டண உயர்வுக்கான சூழல் ஏற்பட்டபோதும், கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்காமல் அரசே ஏற்று, பேருந்து கழகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பேருந்து கட்டண உயர்வு என்பது நிச்சயம் இருக்காது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்தார்.