அமெரிக்கா, சீனாவுக்கு வரி விதித்தும், பொருட்களுக்கு தடையையும் அறிவித்துவிட்டாலும், சீனாவை ஒரேமுறையிலேயே புறந்தள்ள முடியாத நிலைமையில் இருக்கிறது. ஏன் தெரியுமா? காரணம் – சீனா உற்பத்தி செய்யும் ‘அரிய வகை காந்தங்கள்’.
இவை தான் இன்று வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் துறைக்கு உயிராக இருக்கின்றன. வெப்பத்தை சமநிலைப்படுத்தும் திறனுடைய இந்த காந்தங்கள் இல்லாமல் மின்சார வாகனங்கள் உருவாகவே முடியாது. ஆனால் இந்த காந்தங்களை தயாரிக்க வேண்டுமானால், அதற்கான அரிய வகை கனிமங்கள் அவசியம்.
இந்த கனிமங்களை எடுப்பதே ஒரு பெரிய சவால்தான். தோரியம், யுரேனியம் போன்ற கதிரியக்க உருப்படிகளுடன் கலந்து இருப்பதால், பிரித்தெடுப்பது மிகவும் ஆபத்தானது. உற்பத்தி செய்யும் நேரத்தில் பலத்த மின்சாரம், எரிபொருள், பல கட்டங்களை கடக்கவேண்டும் – அமிலத்தில் கரைத்தல், வடிகட்டுதல், மின்னாற்பகுப்பு என பல சிக்கலான செயல்முறைகள். இவை அனைத்தும் நச்சுக்கழிவுகளை வெளியிடும், அது நீர், காற்று, நிலம் என அனைத்தையும் பாதிக்கும்.
இதற்கேற்ப, உலகில் பெரும்பாலான நாடுகள் இந்த வேலைக்கு முன்வர மறுக்கின்றன. ஆனால் சீனா மட்டும் இதனை செய்து கொண்டு தான் இருக்கிறது. பாவோடோ என்ற இடத்தில் உள்ள சுரங்கம் உலகில் மிகப்பெரிய ‘அரிய கனிம’ உற்பத்தி மையம். அதனால் உலகத்தில் உற்பத்தியாகும் அரிய காந்தங்களில் 90% சீனாவிடம் தான் இருக்கிறது.
அமெரிக்கா வரி விதித்தது சரி, சீனா பதிலுக்கு ஏப்ரல் 5ம் தேதி இந்த காந்தங்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துவிட்டது. அதன் பிறகு சீனா விற்பனை செய்யத் தொடங்கவே இல்லை. இதனால் அமெரிக்கா உட்பட உலகமெங்கும் ஆட்டோமொபைல் துறைகள் நடுக்கத்தில் போய் நிற்கின்றன.
இதைத் தவிர, அமெரிக்கா சொந்தமாக இந்த காந்தங்களை உருவாக்க முயற்சி செய்தாலும், அந்த அளவுக்கு வருவதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும். அதனால் தான் எப்போதும், வம்பு செய்த பிறகும், கடைசியில் சீனாவிடம் அமெரிக்கா வந்து உடன்படிக்கையிலேயே முடிக்கிறது.