உலகையே மிரள வைத்த அமெரிக்கா! ₹2 லட்சம் கோடிக்கு 296 போர் விமானங்கள்! இனி என்ன நடக்கும்?

உலக ராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக, சுமார் 2 லட்சத்து 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி உள்ளது. உலகின் மிக அதிநவீன போர் விமானங்களான F-35 ரக விமானங்களை 296 என்ற எண்ணிக்கையில் வாங்குவதற்காக, அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகனுக்கும், லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்திற்கும் இடையே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மையமாக இருப்பது, உலகின் மிகவும் மேம்பட்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானமாகக் கருதப்படும் F-35 லைட்னிங் II ஆகும். எதிரிகளின் ரேடார்களில் சிக்காமல் செயல்படும் இதன் ‘ஸ்டெல்த்’ தொழில்நுட்பம், நெட்வொர்க் மூலமாக போர்க்களத்தைக் கணிக்கும் திறன் ஆகியவை இதனை நிகரற்றதாக மாற்றுகின்றன.

மொத்தம் 24.3 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ், லாட் 18 மற்றும் 19-ஆக, தலா 148 விமானங்கள் வீதம், மொத்தம் 296 விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த விமானங்கள் அமெரிக்க விமானப்படை, கடற்படை மற்றும் மரைன் கார்ப்ஸ் படைகளுக்கு வழங்கப்படும். மேலும், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் வெளிநாட்டு இராணுவ விற்பனை திட்டத்தின் மூலமாகவும் இவை விநியோகிக்கப்படும்.

விமானங்களின் தயாரிப்புப் பணிகள் டெக்சாஸில் உள்ள லாக்ஹீட் மார்ட்டின் தொழிற்சாலையில் நடைபெற உள்ளது, 2026 ஆம் ஆண்டு முதல் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய பணவீக்கம் அதிகரித்துள்ள போதிலும், இந்த விமானத்தின் விலை உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டிருப்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,230-க்கும் அதிகமான F-35 விமானங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்த புதிய கொள்முதல், உலகளாவிய F-35 விமானங்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பதுடன், நட்பு நாடுகளின் பாதுகாப்புத் திறனையும் வலுப்படுத்தும்.

இந்த பிரம்மாண்டமான ஒப்பந்தம், வான்வெளிப் போரியல் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் நிலையை மேலும் உறுதி செய்வதோடு, உலகளாவிய பாதுகாப்பு சமன்பாடுகளிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News