கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

திருவாரூர் மாவட்டம் வெட்டிக்காடு கிராமத்தில் வீட்டுக்குள் மாடு புகுந்ததை கண்டித்ததால், 82 வயது மூதாட்டி கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. ஐ.டி. அணி இணைச் செயலாளர் ஆனந்தபாபு என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், C. ஆனந்தபாபு (திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News