கடந்த ஜூன் 12ம் தேதி மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து, 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம் சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது. விமானம் அருகில் இருந்த மருத்துவ கல்லூரி மீது விழுந்து நொறுங்கியதால், அங்கிருந்த மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் இறக்க, ஒருவர் மட்டுமே தப்பிப் பிழைத்தார். விமானத்தில் பயணித்தவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் என மொத்தமாக இதுவரை 274 பேர் உயிரிழந்து உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற, மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக இந்த சம்பவம் மாறியுள்ளது.
இந்தநிலையில் நாளிதழில் வெளியான விளம்பரம் போல, இந்த விமான விபத்து நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் பிரபல நாளிதழாக இருக்கும் Mid Day, தந்தையர் தினத்திற்காக விளம்பரம் ஒன்றை ஜூன் 12ம் தேதி வெளியிட்டிருந்தது. அதில் ஏர் இந்தியா விமானம் கட்டிடம் ஒன்றில் சிக்கி இருப்பதைப் போல, விளம்பரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
மதியம் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் ஒருபகுதி, அதேபோல கட்டிடத்தில் சிக்கி இருந்தது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப்பார்த்த பலரும், ” விளம்பரம் உண்மையாகி விட்டது. விளையாட்டு வினையாகும் என்று இதைத்தான் சொல்வார்கள் போல, ” இவ்வாறு விதவிதமாக தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.