சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் தனுஷ் (18). சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு வாட்டர் சர்வீஸ் கடையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியே சென்ற தனுஷ், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாள பகுதியில் தனுஷ் ரயிலில் அடிபட்டு உடல் துண்டான நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சேலம் ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தனுஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று அவர் மதுபாட்டில் வாங்கி தண்டவாள பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாகவும், அப்போது அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு உடல் துண்டாகி உயிரிழந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
