திருவள்ளூர் மாவட்டம், நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மகள் ஷர்மிளா தனியார் கல்லூரியில் B.COM இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சர்மிளாவை கடந்த இரண்டு மூன்று மாதங்களாக வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்து காதலிப்பதாக கூறிவந்துள்ளார். இதற்கு சர்மிளா மறுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று வீட்டின் மொட்டை மாடியில் காய வைத்திருந்த துணிகளை ஷர்மிளா எடுக்க சென்றபோது, பக்கத்து வீட்டு மாடியிலிருந்து தாவி குதித்த வாலிபர் சர்மிளாவை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் இடுப்பு எலும்பு உடைந்து படுகாயம் அடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சுயநினைவின்றி இருந்து வருகிறார்.
மது போதையில் இருந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் பிடித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அந்த நபர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பதும், பல மாதங்களாக மாணவியை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் சிலம்பரசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருதலை காதல் விவகாரத்தில் பெண்ணை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
