சென்னை அருகே உள்ள திருநின்றவூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் எதிர்பாராத சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் அணி பொதுக்கூட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவூரில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் உரையாற்றி வந்தார். அப்போது அவர், “மக்கள் விரோத திமுக ஆட்சியை தயவு செய்து அகற்றுங்கள்” என்று பேசிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் திடீரென மேடைக்கு வந்த ஒரு பெண் தன்னுடைய தாலியை கழற்றி எறிந்து கூச்சலிட்டார். இதனால் அங்கு இருந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர் மைக்கைப் பிடித்து, “நான் ஐடி ஊழியர்; கோல்ட் மெடலிஸ்ட். எனக்கு நீதி வேண்டும்.
எனது குடும்பத்தினருடன் வாழ விருப்பமில்லை; கணவருடனும் வாழ விருப்பமில்லை. நான் பைத்தியமா? கொரோனா காலத்தில் இரவெல்லாம் வேலை பார்த்தேன். எனக்கு பாதுகாப்பு இல்லை. நான் அம்பத்தூரில் உள்ள காவல் நிலையத்திலிருந்து தப்பித்து வந்துள்ளேன்” என்று கூறினார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பின்னர் நடந்த விசாரணையில், அந்த பெண்ணுக்கு மனநல பாதிப்பு இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
