உத்தரபிரதேசம், டெல்லி, பீகார் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் பல்வேறு வழிகளை பின்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், பீகார் மாநிலம் சரன் மாவட்டம் சாப்ரா பகுதியைச் சேர்ந்த 8 பேர் கொண்ட ஒரு குடும்பம், அதிக குளிரிலிருந்து தப்பிக்க நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் தீ மூட்டியுள்ளனர். வீட்டில் உள்ள ஒரு அறையில் தீயை மூட்டி, அந்த அறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு அனைவரும் உறங்கியுள்ளனர்.
அப்போது, நெருப்பில் இருந்து வெளியேறிய புகையால் தூங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடும்பத்தினர் அனைவரும் மயங்கி விழுந்துள்ளனர்.
காலை வெகுநேரமாகியும் வீட்டின் கதவுகள் திறக்கப்படாததை பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, குடும்பத்தினர் 8 பேரும் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அனைவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், 3 குழந்தைகள் உள்பட 4 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். மீதமுள்ள 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
