இந்தியாவை சூழ்ந்த அண்டை நாடுகள் தொடர்ந்து சீண்டும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. பாகிஸ்தான் பல ஆண்டுகளாக பயங்கரவாதத்தை பயன்படுத்தி நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிறது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுக்குப் பிறகு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற அதிரடி நடவடிக்கையுடன் பதிலடி கொடுத்து நம் அரசு பாகிஸ்தானைச் சரணடைய வைத்தது.
இப்போது, இன்னொரு அண்டை நாடான வங்கதேசம் நம்மை சீண்ட தொடங்கி விட்டது. கடந்த வருடம் நடந்த கலவரங்களுக்கு பிறகு, வங்கதேசம் இடைக்கால ஆட்சி நிலைக்கு சென்றது. அதன் ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றதிலிருந்து, இந்தியா எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இதிலே அதிர்ச்சி என்னவென்றால், துருக்கியும் இதில் தலையிட்டு இருக்கிறது. இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் ஆபரேட்டர்களை வழங்கிய துருக்கி, தற்போது வங்கதேசத்தையும் அரவணைக்கத் தொடங்கி இருக்கிறது. இந்திய உளவுத்துறை தரவுகளின்படி, துருக்கி பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி மற்றும் ராணுவ ஆதரவை வழங்கி வருகிறது.
வங்கதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்புக்கு துருக்கி திறந்த ஆதரவாக நிதி அனுப்பி வருகிறது. டாக்கா நகரத்தில் புதிய அலுவலகம் தொடங்கவும் உதவி செய்திருக்கிறது. இதன் நோக்கம், நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் அமைதியின்மையை உருவாக்குவதற்காகவே என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைப்பின் மாணவர் பிரிவு தலைவர் சாதிக் கயூம், துருக்கி சென்று முக்கிய தலைவர்களையும் ஆயுத தொழிற்சாலைகளையும் சந்திக்க திட்டமிட்டிருப்பது மிகக் கவலைக்குரியது. இதற்குப் பின்னால் துருக்கி அதிபர் எர்டோகானின் நீண்டகால இலக்கு இருப்பதாக நம் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
தெற்காசியாவிலுள்ள இஸ்லாமிய நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றை துருக்கி தொடர்ந்து ஆதரிக்கிறது. இப்படி பயங்கரவாதம் வலுப்பெறும் போதே, நம் மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகியவை மிகப்பெரிய அச்சுறுத்தலுக்குள் இழுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு மேலாக, மியான்மரில் உள்ள அரக்கான் ஆர்மிக்கும் துருக்கி ஆதரவு தரலாம் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த நாடுகளின் சதி திட்டத்திற்கெல்லாம் எதிராக இந்தியா என்ன செய்யப்போகிறது என்பது இப்போது பெரும் எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.