மதுரை ரயில் நிலையம் செல்லக்கூடிய மேலமாரட் வீதி பகுதியில் உள்ள வணிக கட்டிடத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தின் கிளை அலுவலகம் 2 ஆவது தளத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதியன்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் பெண் மேலாளரான மதுரை பைபாஸ் பகுதியை சேர்ந்த கல்யாணி நம்பி(55) என்பவர் என்பவர் உயிரிழந்தார். மேலும் அலுவலக உதவி மேலாளரான ஆண்டாள்புரம் ராமகிருஷ்ணன் என்பவர் சிகிச்சையில் இருந்தார்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்த கல்யாணி நம்பியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்த புகாரின் அடிப்படையில் திலகர்திடல் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.
இந்த நிலையில் தீ விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து பெண் மேலாளர் கல்யாணி நம்பியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ததாக ஆண்டாள்புரம் ராமகிருஷ்ணன் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
விபத்து தொடர்பான இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்திய கல்யாணி நம்பியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
