திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரை நிவாஸ் சாலையில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்ற 70 வயது முதியவர் ஒருவரை இரண்டு பேர் ஆபாச வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கியுள்ளனர். தொடர்ந்து அரிவாளை காட்டியும் மிரட்டி உள்ளனர். நாங்கள் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள், எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என கூறியுள்ளனர்.
இது குறித்து பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே அந்த நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
அந்த முதியவர் லால்குடி வட்டம் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் உபயதாரர் எனவும். கோயில் வேலையை அவர் செய்யக்கூடாது, ஊருக்குள் வரக்கூடாது என கூறி அவரை மிரட்டி அடித்து அரிவாளால் வெட்ட வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் முதியவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் முதியவரை இருவர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.