மத்திய கிழக்கு மீண்டும் ஒரு பெரும் சிக்கலின் வாசலில் நிற்கிறது.இஸ்ரேல், எந்த எச்சரிக்கையும் இல்லாமல், நேரடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி விட்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை, ஈரானின் தலைநகர் தெஹ்ரானை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரிய வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக, அமெரிக்கா தெளிவாக கூறுவது என்னவென்றால் — “இஸ்ரேலின் தாக்குதலில் எங்கள் உதவியில்லை” என்று கூறியிருக்கிறது. ஆனால், பாதிப்பு மிகப் பெரியதாக இருக்கின்றது.
குறிப்பாக இஸ்ரேலின் ராணுவம், ஈரானில் 10க்கும் மேற்பட்ட அணு மற்றும் ராணுவத் தளங்களை நேரடியாக குறிவைத்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான், தற்போது 60-70% தூய்மையாக்கப்பட்ட யுரேனியத்தை வைத்திருக்கிறது. அதுவே, விரைவில் அணு ஆயுதம் தயாரிக்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில்தான் இஸ்ரேல் தனது முதல் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் முழுவதும் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “ஈரான் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் தொடங்கலாம். பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்” என சைரன் ஒலி எழுப்பி எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சரவையை அவசர கூட்டம் அழைத்துள்ளார். காரணம், போர் என்ற வார்த்தை உண்மையிலேயே அருகில் வந்து விட்டது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரானின் அணு உலைகளை மட்டும் குறி வையுங்கள், பிற்பாடு என்ன நடக்கும் என்பது பிறகு பார்ப்போம்” என்ற ஆலோசனையை இஸ்ரேல் பின்பற்றியிருக்கிறது.
இந்த நேரத்தில், பொருளாதாரமும், உயிரும் ஆபத்தில் இருப்பதை உலகம் முழுவதும் உணர்த்தும் தாக்குதலாக இது உருவெடுத்துள்ளது. எதிர்வினை எப்போது வரும் என்பது தெரியாது, ஆனால் மத்திய கிழக்கு தீப்பிழம்பாக மாறி வருகிறது.