கும்பலாக கடல் அருகே காத்திருக்கும் சிங்கங்கள்! நமீபியாவில் நடந்துள்ள அதிசயம்!

ஆப்பிரிக்காவின் நமீபியா பாலைவனத்தில் வாழும் சிங்கக் குழு ஒன்று, தங்கள் இயல்பான வேட்டையாடும் முறையை மாற்றி, கடலோரத்துக்கு வந்து வாழத் தொடங்கியுள்ளது. இதனால் அவை உலகின் ஒரே “கடல்சார் சிங்கங்கள்” என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

புகைப்படக் கலைஞர் கிறிஸ்டோபர் கோட்டர், நமீபியாவின் ஸ்கெலிட்டன் கடற்கரையில் இந்த வியப்பூட்டும் காட்சியை தனது கேமராவில் பதிவு செய்துள்ளார்.

இயல்பாக பாலைவனச் சிங்கங்கள் மான், வரிக்குதிரை, நரி போன்ற வனவிலங்குகளை வேட்டையாடுகின்றன. ஆனால், நமீபியாவின் வறண்ட சூழல், உணவுக்குறைபாடு போன்ற காரணங்களால், சில சிங்கங்கள் தங்கள் பாரம்பரிய வேட்டையாடும் இடங்களை விட்டு வெளியேறி, அட்லாண்டிக் கடற்கரையோரம் வந்து புதிய வாழ்க்கை முறையைத் தழுவியுள்ளன.

இங்கு அவை கடலில் வாழும் நீர் நாய்கள் மற்றும் பிற கடல் உயிரினங்களை வேட்டையாடி தங்கள் பசியை ஆற்றுகின்றன. இதனால், “பாலைவன சிங்கங்கள் கடலில் வேட்டையாடுகின்றன” என்ற செய்தி உலகளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஞ்ஞானிகள் இதனை, காலநிலை மாற்றத்தால் உருவாகும் விலங்குகளின் வாழ்வியல் தகவமைப்பு மாற்றத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகின்றனர். மனிதன் போலவே, இவை தங்களுடைய வாழ்வை காப்பாற்ற புதுமையான வழியைத் தேடிக் கண்டுபிடித்துள்ளன.

Related News

Latest News