செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் ஒரு கும்பல் பயங்கரமான மோதலில் ஈடுபடுவதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலைநகர் போலீசார், அங்குக் கற்களாலும் ஆயுதங்களாலும் சண்டையிட்டுக் கொண்டிருந்த 7 பேரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் இரு குழுக்களாகச் செயல்பட்டது தெரியவந்தது:
மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் (25), அவரது நண்பர்கள் திருநெல்வேலியைச் சேர்ந்த மாயாண்டி (21) மற்றும் பேச்சிதுரை (20). மறைமலைநகர் பேரமனூர் பகுதியைச் சேர்ந்த ராகுல் (26), சென்னை வடபழனியைச் சேர்ந்த மோகன செல்வன் (19), விக்னேஷ்வரன் (28) மற்றும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மனிஷ் (18) என தெரியவந்தது
மணிகண்டன் தரப்பினர் கடந்த சில மாதங்களாக மறைமலைநகரில் தங்கியிருந்து, அங்கிருக்கும் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்களுக்கும் ராகுல் தரப்பினருக்கும் இடையே கஞ்சா விற்பனை செய்வதில் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1 கிலோ 700 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, 7 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களைச் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
