தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை குறித்து பேசியதாக கூறப்படும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்து, தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம்–1-ல் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர்.
இந்த வழக்கு தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 9 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,
- பி.என்.எஸ். பிரிவு 196 – சமூகங்களுக்கிடையே பகைமை அல்லது வெறுப்பைத் தூண்டும் செயல்கள்.
- பிரிவு 192 – கலவரம் அல்லது பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தூண்டுதல்.
- பிரிவு 352 – அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு அவமதித்தல் அல்லது தூண்டுதல்.
- பிரிவு 79 – பெண்ணின் மரியாதையை இழிவுபடுத்தும் நோக்கிலான சொல், சைகை அல்லது செயல்.
- பிரிவு 296(பி) – ஆபாசமான அல்லது ஒழுக்கக்கேடான வார்த்தைகள்/வெளிப்பாடுகளைப் பொதுவெளியில் பயன்படுத்துதல்.
- பிரிவு 61 – குற்றம் செய்யத் தூண்டுதல் அல்லது உடந்தையாக இருப்பது.
- பிரிவு 351(2) – குற்றவியல் மிரட்டல்.
- பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் – பிரிவு 4 – பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் தொடர்பான குற்றம்.
- ஐ.டி. ஆக்ட் – பிரிவு 67 – மின்னணு ஊடகங்களில் ஆபாசமான உள்ளடக்கத்தை வெளியிடுதல் அல்லது பரப்புதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாநில அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
