தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டது.
இந்த நடவடிக்கைக்குப் பிறகும், விதிமுறைகளை மீறி மேலும் பல டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதாக ‘வி தி லீடர்ஸ்’ தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற நோக்கில் ‘வி தி லீடர்ஸ்’ சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில், அரசின் பட்டியலில் இடம்பெறாத மேலும் 10 டாஸ்மாக் கடைகள் 500 மீட்டர் விதிமுறையை மீறி செயல்பட்டது கண்டறியப்பட்டதாக கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த தகவல்களை சரிபார்த்ததில், மாநிலம் முழுவதும் மொத்தம் 129 டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் விதிமுறைகளை மீறி தொடர்ந்து இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கடைகளின் பட்டியலும் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, 500 மீட்டர் விதிமுறையை முழுமையாக அமல்படுத்தி, விதிமுறைகளை மீறும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
